ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி மகத்தான சாதனை


ஐ.பி.எல். வரலாற்றில் பெங்களூரு அணி மகத்தான சாதனை
x

image courtesy:ICC

தினத்தந்தி 30 May 2025 10:36 AM IST (Updated: 30 May 2025 11:25 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

முல்லான்பூர்,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, பெங்களூரு வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், விக்கெட்டுகளையும் வேகமாக பறிகொடுத்தது. வெறும் 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் அணி 101 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 26 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பில் சால்ட் 56 ரன்களுடனும், ரஜத் படிதார் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் 60 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் பிளே-ஆப் மற்றும் இறுதிப்போட்டியில் அதிக பந்துகள் மீதம் வைத்து வென்ற அணி என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா 57 பந்துகள் மீதம் வைத்து வென்றிருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள பெங்களூரு புதிய சாதனை படைத்துள்ளது.

1 More update

Next Story