பாக்சிங் டே டெஸ்ட்; பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா... 2ம் நாள் முடிவில் 164/5


பாக்சிங் டே டெஸ்ட்; பேட்டிங்கில் தடுமாறும் இந்தியா... 2ம் நாள் முடிவில் 164/5
x

Image Courtesy: AFP

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கம்மின்ஸ் 49 ரன், ஸ்டார்க் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் களம் இறங்கினர். இதில் ரோகித் 3 ரன்னிலும், அடுத்து வந்த ராகுல் 24 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் மற்றும் கோலி இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். இன்றைய ஆட்டம் முடியும் தருவாயில் ஜெய்ஸ்வால் 82 ரன்னில் ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே கோலி 36 ரன்னிலும், ஆகாஷ் தீப் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர். இறுதியில் 2ம் நாள் முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பண்ட் 6 ரன்னுடனும், ஜடேஜா 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்னும் 310 ரன்கள் பின்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

1 More update

Next Story