பாக்சிங் டே டெஸ்ட்: சுப்மன் கில் நீக்கப்பட்டது ஏன்..? துணை பயிற்சியாளர் விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சேர்க்கப்பட்டார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறது.

அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது. பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். இந்த தொடரில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்ததால் அவர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், " சுப்மன் கில்லுக்காக நான் வருந்துகிறேன். அவர் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அணிக்கு தேவைப்படும் கலவையில் அவரால் தனது இடத்தை கண்டறிய முடியவில்லை. அதை அவரும் புரிந்து கொண்டார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com