ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பும்ரா ஆர்வம்..? - வெளியான தகவல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

மும்பை,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் நாளை அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் பும்ரா விளையாட ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறும்போது, ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு பும்ரா ஆர்வமாக உள்ளார். அவர் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி விட்டதாக தேர்வுக் குழு உறுப்பினர்களிடமும், பி.சி.சி.ஐ நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளார். வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்வுக் குழுக் கூட்டத்தின்போது ஜஸ்ப்ரீத் பும்ரா பெயரும் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது, என்று தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com