சாம்பியன்ஸ் கோப்பை: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்று தீர்ந்தது

இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.
துபாய்,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி முதல் மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டம் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறுகிறது
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்ெகட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்று மாலை தொடங்கியது. குறைந்த விலை ரூ.2,900ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்திய அணி லீக் சுற்றில் வங்காளதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் மோத இருக்கிறது.
இதில் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் வாங்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர். டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திற்குள் ஆன்லைனில் காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இருப்பினும் துபாய் மைதானத்தின் இருக்கை வசதி 25 ஆயிரம் மட்டுமே. ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.