

சென்னை,
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் ஐ.பி.எல். போட்டிகளை அனுமதிக்க மாட்டோம் என போராட்டம் நடைபெற்றது. இதனால் மைதானம் அமைந்து உள்ள சேப்பாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மோசமான நிலை ஏற்பட்டது. போராட்டம் நடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இதற்கிடையே சென்னையில் மேற்கொண்டு 6 போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தரப்பு தகவல்கள் வெளியாகியது.
சென்னையில் நடைபெற இருந்த போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடக்கவிருந்த 6 போட்டிகளுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஏப். 14ம் தேதியிலிருந்து 20ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதை தொடர்ந்து சென்னையில் விளையாட முடியாமல்போனது வருத்தமளிக்கிறது' என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும், சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.