

சார்ஜா,
ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வை செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் படிக்கல் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் விளாசினார். அவர் 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் வெளியேறினார்.
அடுத்துவந்த டிவில்லியர்ஸ் 12 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக ஆடிய படிக்கல் 50 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் குவித்து ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
பின்னர் வந்த பெங்களூரு வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால், இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.