சாம்சனை வாங்க ஜடேஜா, சாம் கரனை கொடுத்த சென்னை அணி...அதிர்ச்சியில் ரசிகர்கள்

இரு அணிகளுக்கு இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.
சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த சீசனில் (18-வது சீசன்) ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் சென்னை அணி 6 வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. சென்னை அணியில் இருந்து டெவோன் கான்வே , ரச்சின் ரவீந்திரன், ராகுல் திரிபாதி , தீபக் ஹூடா, விஜய் சங்கர் , ஜேமி ஓவர்டன் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம், சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவருக்கு பதிலாக முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை தரும்படி ராஜஸ்தான் அணி கேட்டது.
இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்து வந்தது. ஆனால் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஜடேஜா நீண்ட காலமாக சென்னை அணிக்கு விளையாடி வருகிறார். அணியின் முக்கிய வெற்றிகளுக்கு அவர் பங்காற்றியுள்ளார்.மேலும் சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படுபவர் ஜடேஜா. இதனால் அவர் சென்னை அணியில் இருப்பார். டிரேடிங் செய்யப்படமாட்டார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக முன்னணி ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோரை கொடுக்க 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது. ஜடேஜா மற்றும் சாம் கரனை கொடுத்து சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்க சென்னை அணி சம்மதம் தெரிவித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையே டிரேடிங் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது.
ரவீந்திர ஜடேஜா 2012-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார். 2023-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஜடேஜா கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி தேடித்தந்ததை மறந்து விட முடியாது. கடந்த சீசனில் அவரை ரூ.18 கோடிக்கு சென்னை அணி தக்க வைத்திருந்தது. அப்படிப்பட்ட அவரை சிஎஸ்கே வேறு அணிக்கு மாற்ற உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு ஆல் ரவுண்டரான சாம் கர்ரனை ரூ.2.4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.






