

மும்பை,
ஐ.பி.எல். தொடரின் 15வது சீசனில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் நேற்று விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில் விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடியாக அடித்து அரை சதம் எடுத்தனர்.
அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர். இதனால், பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 55 ரன்களில் வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடினார். அவர் ஓவர் ஒன்றில் 4 பவுண்டரி, 2 சிக்சர் அடித்தது அணிக்கு பெரிதும் உதவியது. அணியில் அதிக அளவாக 66 ரன்கள் (34 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதுவரை விளையாடிய 6 ஐ.பி.எல். போட்டிகளில் அவர் 197 ரன்கள் சேர்த்துள்ளார்.
போட்டி முடிந்த பின் பேசிய தினேஷ் கார்த்திக், நான் ஒரு பெரிய இலக்கை வைத்திருக்கிறேன் என முதலில் சொல்லி கொள்கிறேன். நான் உண்மையில் கடுமையாக உழைத்து வருகிறேன். நாட்டுக்கு சிறப்புடன் ஏதேனும் செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம்.
அது எனது பயணத்தின் ஒரு பகுதியாகும். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதற்காக ஒவ்வொரு விசயத்திலும் நான் முயன்று கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அவர் இடம் பெற்றார். இந்நிலையில், தொடர்ச்சியாக அதிரடி ஆட்டம் காட்டி வரும் தினேஷ் கார்த்திக், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது.