

லக்னோ,
உத்தரப்பிரதேசத்தில் மாநில கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு வழங்கப்படும் அதிர்ச்சிகரமான வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, அந்த மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனா இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கபடி விளையாட்டு வீராங்கனைகளுக்கு தயாரிக்கப்பட்ட உணவு கழிவறையில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பான வீடியோவை பகிர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " மாநில அளவிலான போட்டியில் கபடி வீரர்கள் கழிவறையில் உணவு உண்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை டேக் செய்து இந்த சம்பவம் தொடர்பாக பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.