அவர்களுக்காக சர்பராஸ் கானை வீணடித்து விடாதீர்கள் - ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவர்களுக்காக சர்பராஸ் கானை வீணடித்து விடாதீர்கள் - ஆகாஷ் சோப்ரா கோரிக்கை
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முன்னதாக இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினர்.

குறிப்பாக சுப்மன் கில் காயமடைந்ததால் வாய்ப்பு பெற்ற சர்பராஸ் கான் முதல் இன்னிங்சில் டக் அவுட்டானார். ஆனால் அதே தவறை 2-வது இன்னிங்ஸில் செய்யாத அவர் தனது முதல் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் 2-வது போட்டியில் சுப்மன் கில் வந்தால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏனெனில் கடந்த இங்கிலாந்து தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த சர்பராஸ் கான் கடந்த வங்காளதேச டெஸ்ட் தொடரில் கே.எல் ராகுல் வந்ததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கில், ராகுல் ஆகியோருக்காக 2016இல் முச்சதம் அடித்தும் அடுத்த போட்டியிலேயே கழற்றி விடப்பட்ட கருண் நாயரை போல் சர்பராஸ் கானை கழற்றி விடக்கூடாது என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"கருண் நாயர் 300 ரன்கள் அடித்தும் அடுத்த போட்டியிலேயே நீக்கப்பட்டார். ரஹானே இடத்தில் விளையாடி 300 ரன்கள் அடித்த அவர் அடுத்த போட்டியில் நீக்கப்பட்டார். இல்லையெனில் அது சிறந்த கெரியராக இருந்திருக்கலாம். ஏனெனில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அந்த வழியில் சென்றால் ராகுலுக்காக நீங்கள் சர்பராஸை உட்கார வைக்க வேண்டும். ஆனால் அது நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். சர்பராஸ் அழுத்தமான நிலையில் 150 ரன்கள் அடித்தார்.

மறுபுறம் சுமாராக விளையாடி அவுட்டான கேஎல் ராகுல் அவருக்கு வழிவிட வேண்டும். சொல்லப்போனால் அவர் வழி விடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணியும் சூழ்நிலையும் முக்கியம். அதனால் சர்பராஸ் கான் விளையாடுவார் என்று நினைக்கிறேன்.

அதே சமயம் ராகுலுக்கு அணி நிர்வாகம் ஆதரவு கொடுக்கும் என்று நம்புகிறேன். அவர் 3வது இடத்தில் விளையாடியிருக்க வேண்டும். அவருடைய இடத்தை மாற்ற விரும்பவில்லை என்று அணி நிர்வாகம் சொன்னார்கள். சர்பராஸ் 150 ரன்கள் அடித்ததால் அவர் மீது அழுத்தம் இருக்கும். ஆனால் அவரையும் நான் தேர்ந்தெடுப்பேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com