துலீப் கோப்பை: தெற்கு மண்டல அணி 536 ரன் குவிப்பு

ஜெகதீசன் 197 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் மேற்கு- மத்திய மண்டல அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய மேற்கு மண்டல அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 363 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணி முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய மத்திய மண்டலம் நேற்றைய ஆட்டநேரம் முடிவில் 67 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
வடக்கு மண்டல அணிக்கு எதிரான மற்றொரு அரையிறுதியில் தெற்கு மண்டல அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் தொடர்ந்து பேட் செய்த முகமது அசாருதீன் (11 ரன்) முதல் ஓவரிலேயே நடையை கட்டினார்.
நிதானமாக ஆடிய ஜெகதீசன் 197 ரன்னில் ஆட்டமிழந்து இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. அந்த அணி 169.2 ஓவர்களில் 536 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அத்துடன் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.






