துலீப் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டல அணியின் கேப்டனாக திலக் வர்மா நியமனம்

கோப்புப்படம்
முகமது அசாருதீன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
பெங்களூரு,
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி முதல் செப்டம்பர்15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் கால்பதிக்கின்றன.
இந்த போட்டிக்கான 16 பேர் கொண்ட தெற்கு மண்டல கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த 22 வயது அதிரடி பேட்ஸ்மேனான திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்திய அணிக்காக 4 ஒருநாள், 25 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
கடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கேரள அணியில் அங்கம் வகித்த முகமது அசாருதீன், நிதீஷ், பாசில், சல்மான் நிசார் ஆகியோருக்கு இடம் கிடைத்து இருக்கிறது. முகமது அசாருதீன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
தமிழக விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசன், சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் இடம் பிடித்து இருக்கின்றனர். கர்நாடகாவை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல், வேகப்பந்து வீச்சாளர் வைஷாக் விஜய்குமார் ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.






