ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து.. கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியது என்ன..?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்டிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் 3-வது போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 371 ரன்களும், இங்கிலாந்து 286 ரன்களும் எடுத்தன. பின்னர் 85 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 349 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 435 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 102.5 ஓவர்களில் 352 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலேயே 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்நிலையில் ஆஷஸ் தொடரை இழந்த பின் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், நாங்கள் இங்கு வந்த கனவு இப்போது முடிந்துவிட்டது, இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. எல்லோரும் அதை நினைத்து வேதனைப்படுகிறார்கள், மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். நாங்கள் ஒரு இலக்கை மனதில் கொண்டு இங்கு வந்தோம், அதை எங்களால் அடைய முடியவில்லை. இது வலிக்கிறது. ஆனால் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.

பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக செயல்பட்டதே இரு அணிக்கும் உள்ள வித்தியாசம். இன்னும் இரு போட்டிகள் எஞ்சியுள்ளன. அவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த விளையாட்டு நீங்கள் எப்படி பேட் செய்கிறீர்கள், எப்படி பந்து வீசுகிறீர்கள், எப்படி பீல்டிங் செய்கிறீர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆட்டத்தில் இருந்து சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அணியாக நாங்கள் எங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொண்டோம். நாங்கள் விடாமுயற்சியுடன் போராடவில்லை.

எங்கள் செயல்திறன் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு இல்லை. தற்போது, ஸ்கோர்லைன் அதைப் பிரதிபலிக்கிறது. ஆனால் எங்களுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. நாங்கள் விளையாட நிறைய இருக்கிறது. நாங்கள் தோல்வியுடன் இந்த தொடரை விடப் போவதில்லை. நாங்கள் மைதானத்தில் எல்லாவற்றையும் விட்டுவிடப் போகிறோம். இந்த கடைசி இரண்டு ஆட்டங்களைப் பார்க்க இங்கே மக்கள் வருகிறார்கள், நாங்கள் விளையாட இன்னும் நிறைய இருக்கிறது. இந்த கடைசி இரண்டு ஆட்டங்களுக்கு நாங்கள் எல்லாவற்றையும் கொடுக்கப் போகிறோம் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com