வீரர்களுக்கு அபராதம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்த கவாஜா
மெல்போர்ன்,
2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல், சூப்பர் 8 சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகளுக்காக வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் டெஸ்ட் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது;
“T20 உலகக்கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். ஆரம்பத்தில் அதை நம்பவே முடியவில்லை. உண்மையிலேயே சிரிப்புதான் வந்தது. ஒரு உயர்தர விளையாட்டு அமைப்பு தோல்விக்காக வீரர்களை அபராதம் விதிப்பது எப்படி நல்ல யோசனையாக இருக்கும்? உலகின் எந்த உயர்தர விளையாட்டு அணியும் போட்டிகளில் தோல்வியடைந்ததற்காக வீரர்களுக்கு அபராதம் விதிப்பதில்லை. அவர்கள் யாரும் வேண்டுமென்றே தோற்பதற்காக ஆடிப் போட்டிகளை இழக்கவில்லை.
இப்படி செய்வதால் அவர்கள் அடுத்த முறை எப்படி சிறப்பாக விளையாடுவார்கள்? இதனால் வீரர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தம் மற்றும் அழுத்தம் மட்டுமே அதிகரிக்கும். பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே மிகுந்த அழுத்தத்துடனேயே விளையாடுகிறார்கள்.இதற்கிடையில் அபராதம் விதிப்பது அவர்களுக்கு மேலும் மனக்கஷ்டத்தையே ஏற்படுத்தும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

