முதல் டெஸ்ட்; டீன் எல்கர் அபார சதம்...2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 11 ரன்கள் முன்னிலை..!

இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 101 ரன்கள் அடித்தார்.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

செஞ்சூரியன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது.

நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

இந்தியா தரப்பில் கே.எல்.ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து இரண்டாம் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுல் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 245 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ராகுல் 101 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய டீன் எல்கர் ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அந்த அணியில் எய்டன் மார்க்ரம் 5 ரன், டோனி டி ஜோர்ஜி 28 ரன், கீகன் பீட்டர்சன் 2 ரன், டேவிட் பெடிங்காம் 56 ரன், கைல் வெர்ரையன் 4 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டீன் எல்கர் சதம் அடித்து அசத்தினார். தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இதையடுத்து 2ம் நாள் ஆட்டம் அத்துடன் முடித்து கொள்ளப்பட்டது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com