ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறை.. அரிய சாதனை நிகழ்த்திய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ரிக்கெல்டன் 61 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 48 ரன்களும் அடித்தனர்.
ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் 4 பேட்ஸ்மேன்கள் ஒரே ஆட்டத்தில் 45+ ரன்கள் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த அரிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் முதல் முறையாக படைத்துள்ளனர்.
பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.






