இறுதிப்போட்டிக்காக சிறப்பாக தயாராகி உள்ளோம் - ஸ்டீபன் பிளம்பிங் பேட்டி

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோத உள்ளன.
Image Courtesy: @ChennaiIPL
Image Courtesy: @ChennaiIPL
Published on

அகமதாபாத்,

ஐ.பி.எல். இறுதிப்போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீபன் பிளம்பிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்காக நாங்கள் கடந்த காலங்களைவிட தற்போது மிகவும் சிறப்பாக தயாராகி உள்ளோம். குஜராத் அணியை எதிர்கொள்ள நாங்கள் எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். சுப்மன் கில் குஜராத் அணியின் பலமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது விக்கெட்டை முடிந்த வரை விரைவாக கைப்பற்ற முயற்சிப்போம். அதற்கு தேவையான திட்டங்களும் எங்களிடம் உள்ளது.

சுப்மன் கில் விக்கெட்டை தொடக்கத்திலேயே வீழ்த்திவிட்டால் குஜராத் அணிக்கு கூடுதல் நெருக்கடி கொடுக்க முடியும். குஜராத் வீரர்களை நெருக்கடிக்குள் வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய முயற்சிப்போம். குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திப்பதால் இறுதிப் போட்டி நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

சி.எஸ்.கே. அணியின் வெற்றி தோல்வி விகிதம் சுமார் 50 சதவீதமாக இருக்கிறது. இறுதிப் போட்டியின் வெற்றி எங்களுக்கு 50 சதவீதமாக உள்ளது. சென்னையில் நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் நாங்கள் முதலில் பந்து வீசவே விரும்பினோம். ஒரு அணி தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வெல்வது என்பது எளிதல்ல. இதனால் நாங்கள் குஜராத்தை வீழ்த்த முழு திறமையையும் வெளிபடுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com