ஹெட், சூர்யா அல்ல... டி20 கிரிக்கெட்டில் இவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - வருண் சக்ரவர்த்தி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தாவின் வெற்றிக்கு வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட் வீழ்த்தி உதவினர். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது வைபவ் அரோராவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்த பின்னர் வருண் சக்ரவர்த்தி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி அபாரமான ஒரு இன்னிங்சை விளையாடினார். வெங்கடேஷ் ஐயரும் கடைசி வரை களத்தில் நின்று அபாரமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். இதைப் போன்று ரிங்கு சிங்கும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் என்பது சராசரியான ஸ்கோர் தான் என்று நாங்கள் நினைத்தோம். எனினும் இந்த இலக்கை தற்காத்துக் கொள்ள முடியும் என்று நம்பினோம்.

எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் நல்ல தொடக்கத்தை பெற்றார்கள். குறிப்பாக வைபவ் வீழ்த்திய விக்கெட் மிகவும் முக்கியமானது. எங்களை முதல் முறையாக ரகானே தலைமை தாங்கி வழி நடத்துகிறார். அவருடைய கேப்டன்சி இன்று சிறப்பாக இருந்தது. ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல நினைத்தோம். எப்போதுமே எங்களுக்கு ரசல் தான் இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவார்.

என்னை பொறுத்தவரை ஹென்றிச் க்ளாசன் தான் சிறந்த டி20 பேட்ஸ்மேன். அவர் களத்தில் இருக்கும்போது நம்மால் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு கடந்த இரண்டு போட்டிகள் மிகவும் கடினமாக இருந்தது. மும்பை அணிக்கு எதிராக நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் பெரியது. எனினும் கடந்த ஆண்டும் இதே போன்ற தோல்விகளை நாங்கள் பெற்றோம். எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் ஆதரவு அளிக்க விரும்புகின்றோம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com