பிரியா சரோஜ் உடன் காதல் மலர்ந்தது எப்படி..? - மனம் திறந்த ரிங்கு சிங்

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.
image courtesy:instagram/rinkukumar12
image courtesy:instagram/rinkukumar12
Published on

மும்பை,

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது நிச்சயம் கடந்த 8-ம் தேதி லக்னோவில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதில் பல உறவினர்கள், நண்பர்கள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் என 300 பேர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் பிரியா சரோஜ் உடன் காதல் மலர்ந்த கதை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ரிங்கு சிங் மனம் திறந்துள்ளார்.

அதில் அவர் பேசியது பின்வருமாறு:- 2022 கொரோனா காலகட்டத்தில் நடந்த ஐ.பி.எல். தொடர் சமயத்தில் எங்களின் காதல் உருவானது. இன்ஸ்டாகிராமில் எனக்கு ஒரு ரசிகர் பக்கம் இருந்தது, அதில் பிரியாவின் கிராமத்தில் சிலர் வாக்களிப்பது பற்றிய புகைப்படத்தை வெளியிட்டனர். பிரியா சரோஜின் புகைப்படத்தை பகிர்ந்து வாக்கு கேட்கும்படி, பிரியாவின் சகோதரி கேட்டார் என்று நினைக்கிறேன்.

அந்தப் படத்தை பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்தது. உடனடியாக அந்தப் படத்திற்கு லைக் செய்தேன். அவள் எனக்கு சரியானவள் என்று நினைத்தேன். மெசேஜ் அனுப்பலாமா என யோசித்து, வேண்டாம் என நினைத்து விட்டுவிட்டேன். சில நாட்கள் கழித்து பிரியா சரோஜ் என்னுடைய படங்களை லைக் செய்திருந்தார். அதற்கு பிறகுதான் மெசேஜ் செய்தேன். இப்படிதான் தொடங்கியது. பிறகு தொடர்ச்சியாக பேச ஆரம்பித்தோம். போட்டிக்கு முன், பின் பேசிக்கொண்டே இருந்தோம். காதல் மலர்ந்தது. 2022 முதல் நான் அவளது அன்பை உணர ஆரம்பித்தேன் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com