

கொல்கத்தா,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கடந்த சீசன்களில் விளையாடிய தீபக் சாகரை ரூ.14 கோடிக்கு எடுத்தது. இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில்,
"நேற்றைய ஏலத்தின் போது நாங்கள் (இந்திய அணி) அகமதாபாத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தோம். நாங்கள் போனில் ஏலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம், மொத்தக் குழுவும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது நான் ஏலத்தில் வரும் போது, ரூ.14 கோடியை எட்டியபின், இதற்கு மேல் நான் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அதற்குப் பிறகு சி.எஸ்.கே வெளியேறினால், நான் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். ஏனென்றால் நான் சென்னை அணிக்காகவே விளையாட விரும்பினேன். வேறு எந்த அணிக்காகவும் விளையாடுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது". இவ்வாறு தீபக் சாகர் கூறியுள்ளார்.