அது எனக்கு சொர்க்கத்தில் எழுதப்பட்டதாக நினைக்கிறேன் - சச்சின்

பி.சி.சி.ஐ.விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர், வீராங்கனைக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று இரவு நடந்தது. இதில் வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருது இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் இந்திய அணி தமக்கு கொடுத்த வழியனுப்பும் நிகழ்வை சச்சின் நினைவு கூர்ந்தார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அந்த தருணங்களை நினைக்கும்போது எனக்கு வார்த்தைகள் இருக்காது. அது திட்டமிடப்படவில்லை. சொர்க்கத்தில் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். அதை திரும்பி பார்க்கும்போது அது எனது வாழ்வில் நடந்ததாக என்னால் நம்ப முடியவில்லை. அதற்காக எனக்கு நானே அதிர்ஷ்டம் உள்ளவனாக கருதுகிறேன். கடைசி நேரத்தில் மொத்த அணியும் சேர்ந்து எனக்காக ஏதோ திட்டமிட்டார்கள். பின்னர் நாங்கள் அதைக் கொண்டாடினோம்.

குறிப்பாக, 'பாஜி நீங்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கள். நாங்கள் சில திட்டங்கள் வகுக்க உள்ளோம்' என்று எம்.எஸ். தோனி என்னிடம் சொன்னார். பின்னர் இருபுறங்களிலும் நின்று எங்கள் அணியினர் எனக்கு கைதட்டி கவுரவம் கொடுத்தார்கள். அப்போதுதான் இனிமேல் இந்திய அணியின் தற்போதைய வீரராக நான் களத்தில் நடந்து வரப்போவதில்லை என்பதை உணர்ந்தேன். அது போன்றவற்றை சிலர் மட்டுமே அனுபவித்திருப்பார்கள்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com