அடுத்த போட்டியில் எனக்கு கண்டிப்பாக பிரச்சினை இருக்கும் - வெற்றிக்கு பின் இலங்கை கேப்டன் பேட்டி

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் எனக்கு கண்டிப்பாக பிரச்சினை இருக்கும் - வெற்றிக்கு பின் இலங்கை கேப்டன் பேட்டி
Published on

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பெர்னாண்டோ மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்புறம் சுப்மன் கில் 35, விராட் கோலி 14, சிவம் துபே 0, ஸ்ரேயாஸ் ஐயர் 7, கேஎல் ராகுல் 0 ரன்களில் ஜெப்ரி வாண்டர்சே சுழலில் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தனர்.

அதனால் மிடில் ஆர்டரில் அக்சர் படேல் 44 ரன்கள் அடித்து போராடியும் 42.2 ஓவர்களில் 202 ரன்களில் ஆல் அவுட்டாகி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்தளவுக்கு சிறப்பாக பந்து வீசி வெற்றி கண்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக ஜெப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா பேசுகையில், "இந்த பிட்ச்சில் பேட்டிங்கில் நாங்கள் எடுத்த ரன்களில் எனக்கு மகிழ்ச்சி. 240 ரன்கள் போதும் என்றே நான் நினைத்தேன். வாண்டர்சே நம்ப முடியாத பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவர் இந்தளவுக்கு அசத்தியுள்ளதால் அடுத்த போட்டியில் தேவையான வீரர்களை தேர்வு செய்வது கேப்டனான எனக்கு கண்டிப்பாக பிரச்சினையாக இருக்கும். வாண்டர்சே பந்து வீச வரும்போது இந்தியா ஓவருக்கு 9 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தது. இப்போதும் நான் முதலில் பேட்ஸ்மேனாக செயல்படுகிறேன். பின்புதான் சில ஓவர்கள் பந்து வீசுகிறேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com