

துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி கடந்த 28ம் தேதி துபாயில் நடந்தது.
ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், ஃபகர் ஜமான் சோபிக்காததால் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் இந்திய அணி 2 பந்துகள் மட்டுமே மீதம் இருக்க 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே இந்த போட்டியில் பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டன.
அதனால் ஜெஃப் க்ரூவ் தலைமையிலான ஐசிசி எலைட் பேனல், இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளுக்கும் போட்டி ஊதியத்தில் 40 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. இரு அணி வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.