இந்தியா வந்து விளையாடாவிட்டால் மாற்று அணி: வங்காளதேசத்துக்கு ஐசிசி எச்சரிக்கை

தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும்.
டாக்கா ,
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து, வங்காளதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்தது.
எந்தவித காரணமும் இல்லாமல் தங்கள் நாட்டு வீரரை ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த வங்காளதேசம், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இந்தியா செல்லமாட்டோம் என்று போர்க்கொடி தூக்கியது. அத்துடன் தங்கள் நாட்டில் ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுதியது.இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்தது.
ஆனாலும் இலங்கையில்தான் தாங்கள் விளையாடுவோம் என்று 2-வது முறையாக வங்காளதேசம் ஐ.சி.சி.யிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தது. தங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் தெரிவித்தது.
ஆனால் அட்டவணையில் மாற்றம் எதுவும் செய்ய இயலாது என்று ஐ.சி.சி. திட்டவட்டமாக கூறி விட்டது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வங்காளதேச அணி இந்தியா வரும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும்படி வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு, ஐ.சி.சி. கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யின் போர்டு இயக்குனர்கள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தனர். இதில் வங்காளதேசத்தின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் வங்காளதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால் அதற்கு பதிலாக மாற்று அணியை சேர்ப்பதற்கு பெரும்பாலான இயக்குனர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதாவது பங்கேற்ற 15 இயக்குனர்களில் பாகிஸ்தான் மட்டுமே வங்காளதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு அளித்தது.
பின்னர் ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், ‘பலகட்டமாக எல்லாவிதமான பாதுகாப்பு அம்சங்களையும், தனிப்பட்ட முறையிலும் விரிவாக ஆய்வு செய்த போது, இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த ஒரு இடத்திலும் வங்காளதேச அணியினர், ஊடகத்தினர், அதன் அதிகாரிகள், ரசிகர்களுக்கு எந்தவித பாதுகாப்பு மிரட்டலும் இல்லை என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி நம்பகமான எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத இத்தகைய சூழலில் போட்டி அட்டவணையை மாற்றம் செய்வது என்பது புனிதமான ஐ.சி.சி. போட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் இது ஐ.சி.சி.யின் நடுநிலை தன்மைக்கு பாதகமாக அமையும் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று தொடர்ந்து முரண்டு பிடித்தால் அந்த அணிக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும்.






