நான் மட்டும் கடைசி வரை நின்றிருந்தால்... இந்நேரம் 50 ஓவர் உலகக்கோப்பை... - கே.எல். ராகுல்

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் வருத்தமான நிகழ்வு என்றால் 50 ஓவர் உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியதுதான் என்று கே.எல். ராகுல் கூறியுள்ளார்.
image courtesy; PTI
image courtesy; PTI
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல், ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் இவரது தலைமையிலான லக்னோ அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளின் முடிவில் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இதனையடுத்து லக்னோ அணி, தனது 7-வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதனிடையே மற்றொரு இந்திய வீரரான அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த கே.எல். ராகுல் பேசுகையில், "என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் வருத்தமான நிகழ்வு என்றால் 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையில் தோல்வியை தழுவியதுதான். நான் மட்டும் பேட்டிங்கில் கடைசி வரை நின்று இருந்தால் ஒரு 30, 40 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க முடியும். இந்நேரம் உலகக்கோப்பை நமது கையில் இருந்திருக்கும்.

நிச்சயமாக எனக்கு அந்த நிகழ்வு இன்னும் மன வருத்தத்தை தருகிறது. ரோகித் சர்மாவும், டிராவிட்டும் அணியில் ஒரு அமைதியான சூழலையும் உருவாக்கினார்கள். எந்த வீரர்களுக்கு என்ன பொறுப்பு என்பதை முன்கூட்டியே விலக்கியதால் எனக்கு அது திருப்திகரமாக இருந்தது" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com