மகளிர் உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

புதுடெல்லி,

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன.

உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி காயத்தை சந்தித்து களத்தில் இருந்து வெளியேறினார். அதேசமயம், அவர் வீல் சேரில் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது காயம் தீவிரமடைந்ததன் காரணமாக, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அவர் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை காயமடைந்துள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com