

சென்னை,
சூப்பர்-8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணி படு தோல்வியடைந்தது. வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சித் தோல்வியையடுத்து, வருகிற 26-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் இந்திய அணியில் இரண்டு பெரிய மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுக்கு அணியில் இடமில்லை என கூறப்படுகிறது. அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து கடைசி இரண்டு போட்டிகளில் இடம்பெறாத ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த டி20 தொடரில் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, நல்ல ரன் ரேட்டையும் பெற வேண்டியது அவசியம். அதனால் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு ‘டூ ஆர் டை’ நிலைமையாக மாறியுள்ளது.