இந்திய கிரிக்கெட்: தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்

13-வது ஐ.சி.சி. மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய கிரிக்கெட்: தோனி, கபில் தேவ் வரிசையில் இணைந்த ஹர்மன்பிரீத் கவுர்
Published on

மும்பை,

13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது.

மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார்.

பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் வோல்வார்ட் 101 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளும், ஷபாலி வர்மா 2 விக்கெட்டுகளும் அள்ளினர்.

இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பையை (ஆண்கள் மற்றும் மகளிர் இரண்டையும் சேர்த்து) வென்ற 3-வது கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்திய ஆண்கள் அணியின் முன்னாள் கேப்டன்களான கபில் தேவ் மற்றும் மகேந்திரசிங் தோனி ஆகியோர் ஐ.சி.சி. ஒருநாள் உலகக்கோப்பையை வென்றுள்ளனர். தற்போது அந்த வரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com