இம்ரானைப் பாதுகாப்பது அரசின் கடமை - சவுரவ் கங்குலி

பாகிஸ்தான் நாட்டை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இம்ரானைப் பாதுகாப்பது அரசின் கடமை - சவுரவ் கங்குலி
Published on

மும்பை,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த 14 புகழ்பெற்ற கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

1992 உலகக் கோப்பை வென்ற பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கானுக்கு ஆதரவாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கடிதம் எழுதியுள்ளது பேசுபொருளானது.

இந்நிலையில், இம்ரான் கானை பாதுகாப்பது பாகிஸ்தான் அரசின் கடமை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கங்குலி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதலில் ஒரு கிரிக்கெட் கேப்டனாகவும், அதன்பின் ஒரு பிரதமராகவும் பாகிஸ்தான் நாட்டை உலக வரைபடத்தில் முக்கிய இடத்திற்குக் கொண்டு சென்றவர் இம்ரான் கான். அப்படிப்பட்ட ஒருவரைப் பாதுகாப்பது அந்த நாட்டின் கடமை. அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவேண்டும். பாகிஸ்தான் அரசு அதைச் செய்யும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com