

புதுடெல்லி,
இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பார்த்திவ் படேல் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று நான் எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவிக்கிறேன். மேலும் இந்த 18 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தில், பலரிடம் நன்றியுடன் இருந்ததாக உணர்கிறேன்.
இந்தியாவுக்காக விளையாடுவதற்கு 17 வயது சிறுவன் மீது பி.சி.சி.ஐ நம்பிக்கை வைத்தது. என்னுடைய இளம் வயதில், ஆரம்ப காலங்களில், ஒரு வழிகாட்டும் சக்தியாகவும், என்னை தக்கவைத்துக் கொண்டதற்காகவும் அவர்கள் மீது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு உள்ளது என்று கூறியுள்ளார்.
பார்த்தீவ் படேல் கடந்த 2002 ஆம் ஆண்டு தனது 17-வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவர் அறிமுகமான போது, இளம் வயது விக்கெட் கீப்பராக அறியப்பட்டார். தற்போது தனது 35-வது வயதில் பார்த்தீவ் படேல் ஓய்வை அறிவித்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகள், 38 ஒரு நாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். உள்ளூர் ஆட்டங்களில் விளையாடி 11,000 முதல் தர ரன்களை குவித்துள்ளார். கடந்த 2016-17 சீசனில் முதல் ரஞ்சி டிராபி வெற்றிக்கு குஜராத்தை வழிநடத்திய பெருமையும் இவருக்கு கிடைத்தது.