

புதுடெல்லியில் ரெயில் பவனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பேசும்பொழுது, அனைத்து இந்தியர்களுக்கும் இது மகிழ்ச்சியான நாள். ரெயில்வே துறைக்கு உண்மையில் பெருமைக்குரிய விசயம் இதுவாகும். உலக தரத்திலான 15 கிரிக்கெட் வீராங்கனைகளில் 10 பேரை ரெயில்வே துறை கொண்டுள்ளது.
அணியின் கேப்டன், துணை கேப்டன், விக்கெட் கீப்பர், அதிக ரன்கள் குவித்தவர்கள் என அனைவரும் எங்களது ஊழியர்கள் ஆவர்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் அடைந்துள்ள வெற்றியை பற்றி நாட்டில் ஒருவரும் கற்பனை செய்தது கூட கிடையாது. அவர்களின் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு இந்த அளவிற்கு அவர்களை கொண்டு வந்துள்ளது என்றும் கூறினார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு அரசாங்க பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ரெயில்வேயில் பத்மஸ்ரீ விருது பெற்றோர் 20 பேர், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றோர் 4 பேர் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற 158 பேர் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹைன் மற்றும் ரெயில்வே வாரிய தலைவர் ஏ.கே. மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.