சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்; வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 74 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: @imlt20official
Image Courtesy: @imlt20official
Published on

ராய்ப்பூர்,

முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 6 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இதில் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் அடித்தது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக லெண்டில் சிம்மன்ஸ் 57 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்டுகளும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்தியாவின் தொடக்க வீரர்களாக அம்பத்தி நாயுடு மற்றும் சச்சின் டெண்டுல்கர் களம் இறங்கினர்.

இதில் சச்சின் 25 ரன்னிலும், அடுத்து வந்த குர்கீரத் சிங் மான் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 74 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து யுவராஜ் சிங் மற்றும் ஸ்டூவர்ட் பின்னி ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் இந்திய அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 74 ரன்கள் எடுத்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com