ஐ.பி.எல்.2025: கொல்கத்தா - பெங்களூரு தொடக்க ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு.. வெளியான தகவல்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
image courtesy:twitter/@KKRiders
image courtesy:twitter/@KKRiders
Published on

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த கலை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியான கொல்கத்தா - பெங்களூரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் போட்டி நடைபெறும் அன்றைய தினம் கொல்கத்தாவில் மழை பெய்ய 70-90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி பெருமளவில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

மேலும் அன்றைய தினம் அந்த பகுதிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் அந்த பகுதிக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட படி போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com