ஐ.பி.எல். 2025: தொடக்க ஆட்டங்களை தவற விடும் ஜஸ்ப்ரீத் பும்ரா..?

ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் போது முதுகில் காயமடைந்தார்.

காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். இந்த நிலையில் அவர் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் வருகிற 22-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில், தொடக்கக்கட்ட ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. அனேகமாக ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பை அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பந்து வீச்சாளராக விளங்கும் பும்ரா விளையாட முடியாமல் போனால் அது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com