

சென்னை,
19வது ஐபிஎல் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 18வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதின. இந்த ஆட்டத்தில் டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அபார வெற்றிபெற்றது.
டெல்லி பேட்டிங் செய்தபோது ஆட்டத்தின் 18.2 ஓவரில் அந்த அணியின் வீரர் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் கிளவுஸ் மாற்றுவதற்கு ஆடுகளத்தில் நடுவரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனால் டெல்லி அணியின் சக வீரர் ஸ்டப்சுக்கு மைதானத்திற்குள் சென்று கிளவுஸ் கொடுக்க முயன்றார்.
ஆனால், ஓவருக்கு இடையே கிளவுஸ் மாற்ற அனுமதியில்லை என்று ஆடுகளத்திற்கு வெளியே 4வது நடுவர் மறுத்துவிட்டார். ஓவர் முடிந்த உடன் கிளவுஸ் மாற்ற அனுமதிக்கப்படுவதாகவும், ஓவருக்கு நடுவே கிளவுஸ் மாற்ற அனுமதில்லை என்றும் கூறி நடுவர் மறுத்துவிட்டார்.
அதேவேளை, புதிய கிளவுஸ் மாற்றாமல் அதே கிளவுஸ் அணிந்து ஆடிய ஸ்டப்ஸ் அடுத்த பந்திலேயே (18.3 ஓவர்) கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
இந்நிலையில், ஓவருக்கு நடுவே ஸ்டப்ஸ் கிளவுஸ் மாற்ற அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த டெல்லி வீரர் நிதிஷ் ராணா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டத்தின் 4ம் நடுவருடன் அவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் ராணாவுக்கு அபராதம் விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதிஷ் ராணாவுக்கு நேற்றைய ஆட்டத்திற்கான கட்டணத்தில் 25 சதவீதம் அபாராதம் விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது. நிதிஷ் ராணா நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, நடுவருடன் நிதிஷ் ராணா வாக்குவாத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.