ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Published on

தர்மசாலா,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தர்மசாலாவில் இன்று நடைபெற்ற 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா களமிறங்கனர். தொடக்கத்தில் இருவரும் அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் வார்னர் 46 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரைலீ ரூசோவ் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களை பறக்க விட்டார் . பிரித்வி ஷா, ரைலீ ரூசோவ் இருவரும் அரைசதம் அடித்தனர். ஷா 54 ரன்களில் ஆட்டமிழந்தார் . பின்னர் வந்த பில் சால்ட் அதிரடியாக விளையாடினார். இறுதியில் 20 ஓவர்களில் டெல்லி 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. ரிலீ ரோசோவ் 82 ரன்கள், பில் சால்ட் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் தவான் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே அவுட் ஆகி நடையைக் கட்டினார்.

பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, அடுத்ததாக லியாம் லிவிங்ஸ்டனுடன் அதர்வா தய்டே ஜோடி சேர்ந்தார். அதர்வா நிதானமாக ஆடி அரைசதத்தைக் கடந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளை பறக்கவிட்டு 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இருப்பினும் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com