ஐ.பி.எல்.: ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் விலகல்..? ரசிகர்கள் குழப்பம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தடுமாறி வருகிறது.
ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 7 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு எதிராக), 5 தோல்விகளை (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளிடம்) சந்தித்துள்ளது.
இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் அரங்கேறிய 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டனான பேட் கம்மின்சின் மனைவி ரெபேக்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரெபேக்கா விமான நிலையத்தில் தனது லக்கெஜ் பெட்டிகளுடன் கம்மின்சும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் 'குட்பை இந்தியா, இந்த அழகான நாட்டைப் பார்வையிடுவதை நாங்கள் மிகவும் விரும்பினோம்' என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் விலகிவிட்டாரா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
ஆனால் இது குறித்து ஐதராபாத் அணி நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.