ஐ.பி.எல்.: வித்தியாசமான சாதனையில் முதலிடம் பிடித்த சூர்யகுமார் யாதவ்

image courtesy:PTI
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
மும்பை,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிக்கெல்டன் 58 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 54 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் மயங்க் யாதவ், ஆவேஷ்கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி களம் புகுந்த லக்னோ அணியால் 20 ஓவர்களில் 161 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் அனைத்து போட்டிகளிலும் 25+ ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக முறை 25+ ரன்கள் அடித்த வீரர் என்ற வித்தியாசமான சாதனை பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராபின் உத்தப்பாவை சமன் செய்துள்ளார்.






