ஐ.பி.எல். டிக்கெட் விலை மேலும் உயர்கிறது

ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது
புதுடெல்லி,
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. .
நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
பிரதமர் மோடி கடந்த மாதம் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். பிரதமர் அறிவிப்பை தொடர்ந்து ஜி.எஸ்.டி. வரி விகிதக்குறைப்பை நிதியமைச்சகம் வெளியிட்டது. இதை அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் எனவும், ஜி.எஸ்.டி 2.0 எனவும் அறிவித்தது.
அதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கும் அறிமுகம் செய்யப்படுகிறது.
மேலும் ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.விளையாட்டுப் போட்டிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வால் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விலை மேலும் உயர உள்ளது. இதுவரை இருந்த வழக்கமான கட்டணத்தை விட டிக்கெட் விலை கூடுதலாக உயரும்.
கசினோ, ரேஸ் கிளப்புகளுக்கும் ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.






