ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட திட்டமா..? சர்ச்சைகளுக்கு பதிலளித்த கம்பீர்


ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட திட்டமா..? சர்ச்சைகளுக்கு பதிலளித்த கம்பீர்
x

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விராட் காயத்தை சந்தித்ததால் மட்டுமே தமக்கு வாய்ப்பு கிடைத்ததாக ஐயர் கூறினார்.

மும்பை,

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. முன்னதாக இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 249 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் சுப்மன் கில் 87 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் அடித்து வெற்றிக்கு உதவினர். சுப்மன் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இருப்பினும் இந்த போட்டிக்கான ஆடும் அணியில் (பிளேயிங் லெவன்) தான் முதலில் தேர்வு செய்யப்படவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி காயமடைந்ததால்தான் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஜெய்ஸ்வாலை பிளேயிங் லெவனில் சேர்க்க அணி நிர்வாகம் முதலில் திட்டமிட்டுள்ளது.

இது பல முன்னாள் வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் 4-வது இடத்தில் விளையாடிய ஸ்ரேயாஸ் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வாயிலாக ஒரு உலகக்கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கி 500-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். அப்படிப்பட்ட அவரை அணியிலிருந்து கழற்றி விட பார்க்கலாமா? என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ஸ்ரேயாஸ் ஐயர் தொடர் முழுவதும் பெஞ்சில் அமர்ந்திருக்க மாட்டார். முதல் போட்டியில் நாங்கள் ஜெய்ஸ்வாலை சோதித்துப் பார்க்க விரும்பினோம். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நல்ல பார்மில் இருந்த அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க விரும்பினோம். ஜெய்ஸ்வால் போன்றவரை நீங்கள் ஒரு போட்டியை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது என்பது எனக்குத் தெரியும்.

அதே சமயம் ஸ்ரேயாஸ் எங்களுடைய முக்கியமான வீரர் என்பதும் தெரியும். சில நேரங்களில் 3 போட்டிகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்போது உங்களுடைய அணியில் இருக்கும் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் நடைபெற உள்ள நிலையில் அந்த 3 போட்டிகளை நீங்கள் அதிகப்படியாகப் பயன்படுத்தி ஒவ்வொரு வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க முயற்சிக்க வேண்டும். அதைத்தான் செய்தோம். மற்ற படி ஸ்ரேயாஸ் எங்களுடைய திட்டங்களின் ஒரு அங்கமாக இருப்பதாலேயே 3 போட்டிகளிலும் விளையாடினார்" என்று கூறினார்.


1 More update

Next Story