

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இவர் கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக விளங்கியவர்.
சமீபத்தில் ஹோம் ஆஃப் ஹீரோஸ் நிகழ்ச்சியில் பேசிய யுவராஜ், ரோகித் சர்மாவை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமித்தது குறித்து பரபரப்பாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், " ரோகித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக்கியது உணர்ச்சிவசப்பட்ட முடிவாக உணர்ந்தேன். உடற்தகுதிக்கு உட்பட்டு உங்கள் டெஸ்ட் கேப்டனை அறிவிக்க முடியாது. அவருக்கு நிறைய காயம் ஏற்படுகிறது. அவர் தனது உடலைக் கவனிக்க வேண்டிய வயதில் இருக்கிறார்.
இது அவருக்கு டெஸ்ட் கேப்டன்சியிலும் அழுத்தத்தை சேர்க்கும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கி ஓரிரு வருடங்கள்தான் ஆகிறது. அந்த இடத்தில் அவர் நன்றாக விளையாடி வருகிறார். அதனால் அவர் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தட்டும். 5 நாட்கள் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடுவது எளிதான காரியமல்ல " என அவர் தெரிவித்துள்ளார்.