ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ஜோ ரூட்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
Image Courtesy: @englandcricket
Image Courtesy: @englandcricket
Published on

லண்டன்,

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோ ரூட் அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ், ஜோப்ரா ஆர்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இங்கிலாந்தை விட 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா உள்ளது.

3ம் நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. இந்நிலையில், ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என ஜோ ரூட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பிட்ச் சவாலாக இருந்ததாலேயே நாங்கள் மெதுவாக பேட்டிங் செய்தோம். அது மிகவும் மெதுவாக இருப்பதால் ரன்கள் அடிப்பது கடினம். நேற்று 99 ரன்களில் இருந்ததால் இரவில் எழுந்த பின் மீண்டும் என்னால் தூங்க முடியவில்லை.

சதத்தை அடிப்பதற்காக காத்திருந்ததும், சதம் அடித்த பின் உடனடியாக அவுட்டானதும் விரக்தியைக் கொடுத்தது. அங்கிருந்து பெரிய ரன்கள் குவிக்காதது ஏமாற்றத்தைக் கொடுத்தது. இப்படி சதங்கள் அடித்து சாதனைப் பட்டியலில் மேலே நகர்வதற்காகவே உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

நாங்கள் 3வது நாளில் 6 - 7 விக்கட்டுகளை வேகமாக எடுத்து முன்னிலை ரன்களை பெறுவது நன்றாக இருக்கும். புதிய பந்தை வைத்து ஏதேனும் செய்வதற்கு பிட்ச்சில் நிறைய உதவி காத்திருக்கிறது. இந்தியா ஸ்கோர் அடிப்பது மிகவும் கடினமானது.

இருப்பினும் ரிஷப் பண்ட் தன்னுடைய வழியில் எதையாவது செய்வார். நாங்கள் புத்திசாலித்தனமாகவும், புதுமையாகவும் செயல்பட வேண்டும். சில நேரங்களில் இயற்கையான சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக வேலை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com