ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: மலேசியாவை 23 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்ற இலங்கை


ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: மலேசியாவை 23 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்ற இலங்கை
x

Image Courtesy: ICC

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

கோலாலம்பூர்,

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மலேசியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக தஹாமி சநேத்மா 55 ரன்கள் எடுத்தார். மலேசியா தரப்பில் சிதி நஸ்வா 2 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மலேசியா அணி, இலங்கை அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த மலேசியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை அணி 139 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மலேசியா தரப்பில் 5 வீராங்கனைகள் டக் அவுட் ஆகினர். மலேசியா தரப்பில் அதிகபட்சமாக நூர் அலியா ஹைரூன் 7 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சாமோதி பிரபோதா 3 விக்கெட், மானுடி நாணயக்கார, லிமான்சா திலகரத்னா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

1 More update

Next Story