

ஆன்டிகுவா,
14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 47 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற டிஎல்எஸ் முறையில் 231 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 138 ரன்களுக்க்கு 6 விக்கெட்டுகளை இழந்தபோதும் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜார்ஜ் பெல்லும் அலெக்ஸ் ஹார்டனும் சிறப்பாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார்கள். ஜார்ஜ் பெல் 56, அலெக்ஸ் 53 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது. முன்னதாக ஆப்கானிஸ்தான் அணி 10 பந்துகளில் 18 ரன் எடுக்கவேண்டியிருந்த நிலையில், கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ரேஹன் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது.
இதனிடையே இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஏற்கனவே 3 முறை தொடர்ச்சியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.