

பார்ல்,
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
இந்த சூழலில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் நகரில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இந்நிலையில் இந்தியாவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா விடுவிக்கப்படுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் கூறுகையில், ரபாடா தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடி வருவதால் அவருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் மாற்று வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே வெள்ளை பந்து போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர் போட்டி) ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக அவருக்கு பதில் கே.எல்.ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.