கடைசி ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி- தொடரை வென்று அசத்தல்..!

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
Image Courtesy: Twitter @ICC 
Image Courtesy: Twitter @ICC 
Published on

புதுடெல்லி,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனிடையே தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மலான் மற்றும் டி காக் களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரில் வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டி காக் 6 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மலான் (15 ரன்கள்) , ஹென்ரிக்ஸ் (3 ரன்கள்) , மார்க்ரம் (9 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் க்ளாஸென் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் மற்றொரு முனையில் தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. குறிப்பாக குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இமாட், நோர்ட்ஜெ ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கேப்டன் தவான்- சுப்மன் கில் களமிறங்கினர். ஒருபக்கம் சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவான் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 42 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் சுப்மன் கில் உடன் ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கில் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷ்ரேயஸ் ஐயர்- சாம்சன் ஜோடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 105 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com