ஓமன் அணிக்கு எதிரான போட்டி: இம்பேக்ட் வீரர் விருதை வென்ற ஹர்திக் பாண்டியா

இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது.
அபுதாபி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா - ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது. அவர் பதக்கத்தை உதவி பயிற்சியாளரான தயானந்த் கரனியிடம் வழங்கினார், அவர் பீல்டிங் பயிற்சிகளின் போது அவருக்கு நிறைய உதவியுள்ளார் எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.






