சுனில் நரேன் இல்ல...அவர் தான் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார் - ஸ்ரேயாஸ் ஐயர்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல் தொடரில் நேற்று மாலை கொல்கத்தாவில் நடைபெற்ற 36வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 55 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனலாம்.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த போட்டியில் பல்வேறு உணர்வுகள் கலவையாக இருந்தன. அதோடு இறுதிவரை அமைதியாக இருந்து இந்த போட்டியில் வென்றது சற்று கடினமாகவே இருக்கிறது. இருப்பினும் இறுதியில் நாங்கள் இரண்டு புள்ளிகளை வென்றதில் மகிழ்ச்சி.

உண்மையிலேயே இந்த போட்டி கடைசி வரை அழுத்தமாகவே இருந்தது. ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை இந்த போட்டியில் சரியாக வழங்கினார். ரசல் 2 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் கைப்பற்றி போட்டியை எங்களது பக்கம் திருப்பினார்.

அது போன்ற ஒரு செயல்பாடு தான் எங்களுக்கு தேவையாக இருந்தது. கடைசி ஓவரில் 18 ரன்கள் சென்றதும் பந்துவீச்சாளர் மீது அழுத்தம் ஏற்பட்டது. இருந்தாலும் இறுதிவரை பொறுமையாக இருந்து வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இனிவரும் போட்டிகளிலும் இதே வெற்றியை தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com