

மும்பை,
ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவில் இந்திய அணியின் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர தொடக்க வீரருமான ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 19-ம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியே ரோகித் சர்மாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் நோக்கில் தேர்வுக்குழு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த முடிவில் இந்திய அணியின் முதன்மைத் தேர்வாளர் அஜித் அகர்கர் முக்கிய பங்கு வகித்ததாகவும், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் கருத்தை விட தேர்வுக்குழுவே முக்கிய காரணமாக இருந்ததாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அல்லது ரோகித் சர்மா தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.